...

1 views

கொடையாளிப்பட்டி
ஒரு ஊர்

அந்த ஊருக்குப் பெயர் கொடையாளிப்பட்டி.

அந்த பேருக்கு தகுந்த மாதிரி அந்த ஊர் மக்கள் யார் வந்து என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பார்கள்.

கொடையாளிகள் நிறைந்த ஊர். தானமாக மட்டுமில்லை கடனாகவும் பணம் கொடுப்பார்கள்.

யாருக்காவது அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றால் அந்த ஊருக்கு போய் வாங்கிக்கொள்ளலாம்.
பத்திரம் தேவையில்லை.
சாட்சி தேவையில்லை.
எந்த உத்தரவாதமும் இல்லாமல் பணம் கொடுத்துவிடுவார்கள்.

ஒருவனுக்கு பணம் தேவைப்பட்டது.
சொந்தபந்தம் எல்லாம் கேட்டுப் பார்த்தான்.
யாரும் கொடுப்பதாக இல்லை. எல்லோரும் அவர்கள் சௌகரியத்தை பார்க்கிறார்கள். அடுத்தவர் கஷ்டங்களைப் பற்றி கவலைப்படாதவர்கள்.

இவர்கள் எல்லோரையும் கேட்டுப் பார்த்துவிட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான்.

அந்த நேரம்தான் கொடையாளிபட்டியை பற்றிக் கேள்விப்பட்டான்.

அப்படி ஒரு ஊர் இருப்பது தெரிந்ததும் அந்த ஊருக்கு வழி கேட்டுக்கொண்டு ஒருநாள் புறப்பட்டுப் போனான்.

வயற்காட்டு வழியாக போய்க்கொண்டிருந்தான். மெதுவாக நடந்து ஊர் எல்லைக்கு வந்து விட்டான்.
இரண்டு பக்கமும் விவசாய வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.
சிலபேர் உழுது கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கே ஒரு ஆளை பாம்பு கடித்துவிட்டது.
பக்கத்திலே வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள்.
அவசரமாகச் செய்ய வேண்டிய முதலுதவி எல்லாம் செய்து பார்த்தார்கள்.
பலனில்லை!
அவன் செத்துப் போய்விட்டான்.

அவன் செத்துவிட்டான் என்று தெரிந்ததும் அவனை தூக்கி மேலே போட்டுவிட்டு எல்லோரும் அவர்கள் வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அங்கே ஒரு ஆள் இவனைப் பார்த்துச் சொன்னான் "ஐயா, நீங்கள் போகிற வழியில் இவன் சொந்தக்காரன் இவனுக்கு சோறு கொண்டு வருவான் இவன் இங்கே செத்துவிட்டதாக அவனிடம் சொல்லி விடுங்கள் " என்றான்.

அவனுக்கு ரொம்ப ஆச்சரியம்! என்னடா இது பாம்பு கடித்து விட்டது என்றதும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.

செத்துவிட்டான் என்றதும் ஏதும் பேசாமல் தூக்கிப்போட்டு விட்டு போய்விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டே நடந்து போனான்.

எதிரில் சோறு கொண்டு வந்தவரிடம் விவரத்தைச் சொன்னான்.
"அங்கே உன் சொந்தக்காரன் பாம்பு கடித்து செத்துப் போய்விட்டான்" என்றான்.

அவன் கொஞ்ச நேரம் அமைதியாக நின்றான்.
பிறகு அங்கேயே உட்கார்ந்து கொண்டு வந்த சோற்றை தானே சாப்பிட்டு முடித்தான்.
பேசாமல் திரும்பிப் போய்விட்டான் .
கொஞ்சம்கூடப் பதறவில்லை . அழவில்லை.

இப்படியும் ஒரு ஊரா? என்று நினைத்து ஆச்சரியப்பட்டு கொண்டே அவன் ஊருக்குள் போனான்.

ஒரு பெரிய மனிதரைப் பார்த்து பணம் கேட்டான்.
அவரும் இவனுடைய பெயரையும் ஊரையும் மட்டும் விசாரித்துவிட்டு தேவையான பணத்தை கொடுத்து விட்டார்.

பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த அந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டான்.

"ஐயா வழியில் ஒருவன் செத்துவிட்டான் அவனை அப்படியே தூக்கி போட்டுவிட்டு எல்லோரும் வயல் வெளியில் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றான்.

அதற்கு அந்த பெரியவர் சொன்னார்.
"ஆமாம் அப்படித்தான் செய்வோம். வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது அவனை தூக்கிக்கொண்டு வந்து அடக்கம் செய்து விடுவோம்" என்றார்.

"ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது" என்றான்.

"ஏன்? உங்கள் ஊரில் யாராவது இருந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார் அவர்.

"என்ன இப்படி கேட்கிறீர்கள்.
எங்கள் ஊரில் எல்லாம் பிணத்தை தூக்கவே விடமாட்டார்கள்.
கட்டிப் புரண்டு அழுது புலம்பித் தீர்த்து விடுவார்கள்" என்றான்.

பெரியவர் பார்த்தார்.

அவனிடம் கொடுத்த பணத்தை லபக்கென்று பறித்துக் கொண்டார்.

இவன் பதறிப் போய் நின்றான்.

பெரியவர் சொன்னார்:
"பிணத்தையே விடமாட்டேன் என்று கட்டிப்பிடித்து அழுதால் நான் கொடுத்த பணத்தை மட்டும் எப்படி திரும்ப கொடுக்கப் போகிறாய்? போ போ"
-என்று அவனை விரட்டி விட்டார்.


//இந்த கதை வேடிக்கையாக தெரிந்தாலும் இதில் ஆழமான கருத்து உண்டு.

பணம், குணம் இவை இரண்டையுமே அவ்வளவு சுலபமாக விடுவதற்கு நமக்கு மனம் வருவதில்லை என்பதே நிதர்சனம்//


//பார்த்ததில் படித்தது
படித்ததில் பிடித்தது
பிடித்ததில் பகிர்ந்தது//