...

8 views

ஜென்மத்தின் தேடல்
"வடிவுடை நாச்சியார்...வடிவுடை நாச்சியார் ..... " என்று கண்களில் ஆவலோடு ஜமீன் செங்கோடன்.

சடைநாகம் கூந்தலில் சூடி, நெற்றியில் பிறை நிலா திலகமிட்டு, கோப்பு, டோலாக்கு, புல்லாக்கு, முறுக்கு குச்சி ஒனப்பத்தட்டு என ஆங்காங்கே காதணிகள் விளையாட, அழகிய கலைநயம் கொண்ட போல்கி , ஜடாவ் நகைகள், மீனாக்கரி வேலைப்பாட்டுடன் கூடிய அட்டிகை, சோக்கர் கழுத்தை அலங்கரிக்க, ஒட்டியாணம், காற் சிலம்பு, கான் மோதிரத்துடன் கூடிய கால் விரல்கள் மற்றும் மஞ்சள் நிற முகா பட்டு அணிந்து சிலம்பொலி கேட்க வெண்கலச் செம்பில் கடுக்காய் தண்ணீருடன் நளினமாக வந்து நின்றாள் வடிவுடை நாச்சியார்.

நாச்சியார், " யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே இந்த பழமொழி கேள்விபட்டிருப்பாய் என்று நினைக்கிறேன். " என்றார் சிரித்து கொண்டே ஜமீன்.

"ஏன், திடீரென சொல்கிறீர்கள்?.. " என்றார் நாச்சியார்.

"நீ வருவதை உன் அணிகலன்களே வெகு விரைவில் தெரியப்படுத்து விடுகிறது... " என்று சிரித்தார் ஜமீன்.

"தினமும் என் அணிகலன்களை கேலி செய்யாவிட்டால் பொழுது போகாது நம் ஜமீனுக்கு... "

சரி, நம் ஜமீன் வாரிசுகள் எங்கே?.. என்று கேட்டார் ஜமீன் செங்கோடன்.

செம்பியன்... செம்பியன்... என்றார் பாசமாக ஜமீன்.

"இதோ குட்டி ஜமீன் மரக்குதிரையில் ஊரை சுற்றி பார்க்க சென்று கொண்டிருக்கிறேன்.. " என்று செம்பியன் விளையாடிக் கொண்டே கூறினான் செம்பியன்.

"ஓ..! ஜமீன் குதிரை பவனியோ... ஊர் மக்கள் என்ன சொல்கிறார்கள்... " என்று செல்லமாக கேட்டார் ஜமீன்.

வணக்கம் சொல்கிறார்கள் என இரு கை கூப்பி வணக்கம் கூறினான் செம்பியன்.

"யாருக்கு வணக்கம் கூறுகிறார் நம் குட்டி ஜமீன்" என்று தனக்கு பின் திரும்பி பார்த்தார்.

"வாருங்கள்... வாருங்கள்... வணக்கம்.
ஊர் பெரியவர்கள், கோவில் நிர்வாகிகள் எல்லோரும் வந்து
இருக்கிறீர்கள். அதுவும், தாம்பூலத் தட்டு கொண்டு வந்திருக்கிறீர்கள். எதுவும் விஷேசமா..."

"ஜமீன்தார் ஐயாவிற்கு வணக்கம். வருசா வருசம் ஊர் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்த வருசம்
ஆடி மாதம் பிறந்தது விட்டது.... அதான்
நம்ம கருமாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக செய்யனும். அதை பற்றி பேசிவிட்டு போலாமென்று வந்தோம். " என்று தாம்பூலத் தட்டை நீட்டினார் கோவில் நிர்வாகிகள்.

" சிறப்பான முறையில் செய்து விடலாம். அதிலும், நாட்டரையர் ஊர் திருவிழாவென்றால் சுற்று பட்டி கிராமங்களில் சிறப்பு பெற்றது. கணக்குப்பிள்ளை நாச்சியார் எங்கே..." என்று அழைத்து வர சொன்னார்.

"அம்மா... ஊர் பெரியவர்கள் வந்திருக்கிறார்கள்.... ஐயா தங்களை அழைத்து வர சொன்னார். " என்று கணக்குப்பிள்ளை கூறினார்.

"நாச்சியார் சென்றவுடன் தாம்பூலத் தட்டை கொடுத்து விட்டு வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வா... " என்றார்.

" ஐயா, தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கிறது.... நம் ஊரில் இப்படி ருசி மிகுந்த தண்ணீர் எங்கே இருக்கிறது... "
என்று ஜமீனிடம் கேட்டார்கள்.

"நீங்கள் எல்லாரும் குடிக்கும் தண்ணீர் தான் இது. ஆனால், கடுக்காய் பொடி கலந்து வைப்போம். அதன் ருசியும் தனி. அதன் பலமும் தனி. கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் வாழலாம். உடல் நோய் எல்லாவற்றையும் சீர் செய்யும்... "
என்றார் ஜமீன் செங்கோடன்.

"ரொம்ப சந்தோஷம் ஐயா... நாங்க உத்தரவு வாங்கி கொள்கிறோம். " என்று ஊர் மக்கள் கிளம்பினார்கள்.

கோவில் அர்ச்சகர், " ஐயா, நாளை நாள் நன்றாக இருக்கிறது. நாளையே திருவிழா கொண்டாடுவதற்கு அம்மனிடம் பூ உத்தரவு வாங்கிடலாம். " என்று கூறினார்.

"சரி பூசாரி, நாளை அதற்கான ஏற்பாடுகள் தொடங்கட்டும்." என்றார் ஜமீன்

மறுநாள் காலை அம்மனை அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி மூவகை பொங்கல் படையல் இட்டார் பூசாரி.

ஜமீன், "பூசாரி, அம்மன் சிரசில் பூவை வைத்து கற்பூரத்தை காட்டுங்கள். ஆத்தா... தாயே... பூ உத்தரவு கொடும்மா... எல்லா மக்களுக்கும் செழிப்பான வாழ்க்கை கிடைக்க வேண்டும் அம்மா... " என்று வணங்கினார்.

பூசாரி அம்மன் சிரசில் பூவை வைத்து விட்டு தேங்காய் உடைத்தார். ஆனால், தேங்காய் அழுகிவிட்டது. அபசகுனம் காட்டுகிறதே, சரி கற்பூரத்தை காட்டுவோம் என்று கற்பூரம் காட்டினார்... அம்மனுக்கு
ஆரத்தி காட்டும் போது கற்பூரம் அணைந்து விட்டது அதே நேரத்தில் பூ உத்தரவும் கிடைத்து விட்டது.

அனைவருக்கும் குழப்பம், தேங்காய் அழுகிவிட்டது, கற்பூரம் அணைந்தது அதே நேரத்தில் பூ கீழே விழுந்து உத்தரவும் கிடைத்து விட்டது.

ஜமீன் செங்கோடன், " என்ன செய்வது என்று புரியவில்லை... உத்தரவு கிடைத்தால் திருவிழா நடத்தலாம்... ஆனால், தேங்காய் அழுகிவிட்டது, கற்பூரம் அணைந்து விட்டது. இதை எப்படி எடுத்து கொள்வது புரியவில்லையே... " என்று பூசாரியிடம் கேட்டார்.

அதற்கு பூசாரி, " ஐயா, சாமி பூ உத்தரவு கொடுத்து விட்டது என்றால் திருவிழா நடத்த வேண்டும். அதை நிறுத்த கூடாது. ஆத்தா மேல பாரத்தை போட்டு விட்டு திருவிழாக்கு காப்பு கட்டி..." என்று சொல்லும் போதே பல்லி சத்தம் கொடுத்தது.

"ஆஹா, நல்ல சகுனம் பூசாரி. நாளை காப்பை கட்டி விடலாம்... " என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு ஜமீன் செங்கோடன் அரண்மனைக்கு புறப்பட்டார்.

போகும் வழியில் "வண்டியை நிறுத்துங்கள்... " என்றார் ஜமீன்.

"சிறிது நேரம் கழித்து கணக்குப்பிள்ளையின் கண்களை பார்த்தவர் அவரின் கையை தட்டி பிறகு பார்த்து கொள்ளலாம்... இப்போது வேண்டாம்." என்று கூறி வண்டியை எடுக்க சொன்னார்.


✍ ஜென்மம் தொடரும்✍
© Ramyakathiravan