மாயை
அதிகாலை பொழுதினை அழகாக்கும் கதிரவனின் வருகையில் துயில் கலைத்து விடியல் கொண்டது விழிகள்...
என்றுமில்லாத புதிதாக தோன்றியது நாட்கள்...
நான் தான் அது
புது புடவையில் அலங்காரம் பண்ணிக்கொண்டு
மாலையும் சூடிக்கொண்டிருக்கிறேன்...
என்னை சுற்றி ஏன் இத்தனை கூட்டம்...
என்றைக்கும் வராத உறவினரின் வருகை வேற...
அத்தனை சப்தம்
இச்சப்தங்கள் எனக்கு மகிழ்வை தரவில்லை...
இருப்பினும் உறவினரின் வருகை மகிழ்ச்சியாக இருந்தது...
பால்ய பருவத்தின் தோழமைகளும்
இருந்தனர்
எத்தனை வருடங்களாயிற்று இவர்களை பார்த்து...
பள்ளி வயதில் முதல் காதல் கடிதம் கொடுத்து என்னிடம் வசவு வாங்கியவன் தான் இவன் இவனும் என்னை பார்க்க வந்திருக்கிறான்...
எத்தனை சந்தோசம் என்னில்...
ஆனால் ஏன் இவர்களெல்லாம் கண்ணீர் ததும்பி நிற்கிறார்கள்...
மகிழ்வினை கொண்ட என்னால் அவர்களை தொட்டு பார்த்து பேச இயலவில்லை...
சடலமென கிடத்தப்பட்டிருக்கிறேன்...
கடைசியாக நான் பார்க்க காத்திருக்கும் முகம் மட்டும் என் கண்களில் இன்னும் படவில்லை...
தூரத்தில் கேட்கிறது ஒரு குரல்
கதறி அழுதபடி...
சட்டென விழித்துக்கொள்கிறேன்
அனைத்தும் கனவென்ற மாயையாக...
அக்குரல் மட்டும் நிஜமென ஒலித்துக்கொண்டே இருக்கிறது
கண்ணீர் சிந்திய வண்ணம்...
© Rathna