...

5 views

💕தீராக் காதல் 💕திகட்டா நேசம் 💕
இன்று என் வாழ்வில்
ஒரு நன்னாள்
இப்பாரினில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏங்குவது தான் விரும்பியவளை மணம் முடிப்பது......
அந்நாள் அனைவருக்கும் ஒரு நன்னாள்......


ஆம், இன்று நான் விரும்பியவளை மணம் முடிக்கப் போகிறேன்! சுற்றிலும் அமைதியான சூழல்
வானமகள் தன் கணவன் சூரியனுடன் வந்திருந்தாள்..... என்னவளின் நண்பன் மேகவர்ணனும்
அட்சதையை மழையாய் தூவக் காத்திருத்தான்.......


நான் என்னவளை எதிர்பார்தாதிருந்தேன்...
என் உறவினர்கள் கண்ணீருடன் உலாவினார்கள்....
பொறாமை என நினைக்கிறேன்!
இப்படி ஒருத்தியை மணம்முடிப்பது குறித்து......


என்னவளை உலகமே பொறுமைசாலி என பாராட்டும்!
அவளைத்
தொடும்போது மட்டும்
இவள் எனக்கானவள்
என நினைக்கத்
தோன்றும்!


சிறுவயதில் இருந்தே
அவள் மீது எனக்கு
தீராக் காதல்
திகட்டா நேசம்.....
ஆனால்,
என் அன்பை
அவளிடம் கூற அச்சம்..... துணிந்து ஒரு நாள் கூறினேன்
நான் உன்னோடு
இணைய விருப்பம் என்று.....
அவள் தன்
வெட்கத்திலேயே சம்மதம் தெரிவித்தாள்......


அதன் பலன்
இன்று அவளுடன்
தோள் சேரப் போகிறேன்!
ஊர் உலகம்
அறியாமல் அவளை அணைத்த நான்,
இன்று அவர்கள் முன்னிலையில் அணைக்கப்போகிறேன்......



என் உறவினர்கள்
எனக்கு கோடித்துணி உடுத்தி விட்டார்கள்.... பூமாலைகள்
என் கழுத்தில்
ஒன்றா ?இரண்டா? அப்பூக்கள் போலவே அவளும் வாசமுடன் இருப்பாள்.....
அவளுக்கு நான்
வைத்தப் பெயரும்
'மலர் 'என்பதே.....
அவளின் உண்மையான நாமத்தை பிறகு கூறுகிறேன்.......



ஆகா,
என்னை மேடைக்கு கொண்டு செல்கிறார்கள்.....
இப்பொழுதும்
என் உறவினர்கள் கண்ணீருடன் உலாவுகிறார்கள்...... ஒருவேளை,
ஒரு பெண்ணிடம் நான் மாட்டிக்கொண்டுவிட்டேன் என எண்ணுவார்கள் போல......


ஆகா,
இவள் என்னை முறைக்கிறாள்....
நான் எதிர்பார்த்த நேரம் நெருங்கிவிட்டது....
இதோ நான் அவளருகில்.... இல்லை இல்லை
அவளுடன் நான்....


இதோ
அவள் நண்பன்
மழையாய் அட்சதை தூவுகிறான்....
அவள் தாய்
தந்தையான
சூரியனும் வானமகளும் ஒளியாய் அட்சதை தூவுகிறார்கள்.....
ஆனால்,
இன்னும் என்
உறவினர்கள் கண்ணீரிலே அட்சதை தூவுகிறார்கள்.... விவரம் இல்லாத மனிதர்கள்......


நான் எவ்வளவு
மகிழ்வுடன் இருக்கிறேன் காதலித்தவளை கைப்பிடித்ததை எண்ணி.... நான் என்னவளிடம்
ஒரு வேண்டுகோள் விடுத்தேன்.....
எப்பொழுதும் நான்தானே உன்னை அணைப்பேன், இன்று நீயாக
என்னை அணைப்பாயா? என்று.....


அதற்கு மௌனமே சாதித்தாள்.....
"மலரே மௌனம் ஏன்?"என்றேன்.....
வெட்கத்துடன் என்னை அவள் அணைத்துக்கொண்டாள்.....


நிலமகளான அவள்!
நான் அவளுள்ளே
அவள் என் மேலே!
இதை
"சமாதி "
என்கிறார்கள்
அற்ப மானிடப்
பதர்கள்.....