...

2 views

குளிர்தரும் விருட்சமாக மாறி விடு.....
இறுக்கமான முகங்கள்
பெரிதாக ஒன்றும் சாதித்து விடுவதில்லை
வெறும் கொத்தான வெறுப்புகளையன்றி...
நீ அகத்தின் அழகை உன்
முகத்தில் புன்னகையால் நித்தம்
வரைந்ததால் தானோ என்னவோ
நீயறியாத உன் நேசங்கள்
உன்னைச் சூழ தானாகவே வளர்ந்தவாறு....
நாம் நினைத்தவுடன் வாங்கி
அலங்கரித்துக் கொள்ள நற்பண்புகள்
ஒன்றும் சாலையோர சாமங்கிப் பூக்களல்ல
அது பக்குவமானவர்களால்
பார்த்துப் பார்த்து பதிக்கப்பட்ட
பெறுமதியான இரத்தினங்கள்....
நீயும் எங்களுக்கு அலங்காரமாக
தென்பட்டது உனக்குள் உன் பெற்றோரும்
கற்றோரும் பதித்து வைத்த
நற்பண்புகளால் என்பதை நான்
சொல்ல வேண்டியதில்லை.....
கற்றுத்தர நல்லாசான் அமைந்துவிட்டால்
புத்தகங்கள் தேவையில்லை
அதற்கு நீயும் ஒரு உதாரணம்
என்பதை நான் என்னளவில் புரிந்து கொண்டேன்...
உன் ஈகோக்களை பொறுமையாக
கையாண்டதால் தான் அற்பப் பிரச்சினைகள்
எனும் உலக மாயைக்குள் நீ
தடுமாற்றமின்றிப் பயணிக்கிறாய்.....
உன்னை ஒருமையில் விழிக்கையில்
உனக்கு சங்கடமாக இருந்தாலும்
நான் கவலைப்படப்போவதில்லை.....
ஏனெனில் நான் உன்னை என்
இளைய சகோதரனாகவே எப்போதோ
உற்று நோக்கத் தொடங்கி விட்டேன்....
சொற்பகால புரிதல்களுடன் ஆறு
ஆண்டுகளில் உன் பண்பான செயல்களால்
எப்போதும் உயர்ந்தே நின்றாய் சக
உள்ளங்களில் ஒரு இளநீர் மரம் போல.....
இளநீரைச் சுவைக்கும் மனிதர்கள்
அந்த தருவை ஒரு போதும் ரசிப்பதில்லையே.....
இது உலக வழமைகளில் ஒன்றல்லோ....
உனது ஆளுமைகளை எப்போதும்
தொய்வடைய சந்தர்ப்பம் அளித்து விடாதே!
உனது பாதை நேரானது என்பதை
உன்னை நேசிப்பவர்கள் அறிவர்....
உன்னுள் மிளிரும் விழுமியங்களால்
இந்த இளைய சமூகத்தினரை
பயமின்றி ஆக்கிரமித்து விடு....
காட்டுக்குள் வளரும் ஒரு
சாத்தாவாரிக்கொடி போல விறைப்பாய்.....
அது பச்சைக் கொடியாக
இருக்கும் வரை மணப்பதில்லையே.....
எப்போது அவை உலர்ந்து
சருகான இலைகளாக ஒரு கப் தேனீரினுள் அடங்குமோ அதுவரை...
அன்றல்லோ அவற்றின் வாசம் நாசி
துளைத்து நாவின் சுவை நரம்புகளில்
ஊடறுத்து மூளையம் சிலிர்க்க வைக்கும்....
அதுபோல நீயும் இந்த எதிர்கால
இளைய சமூகத்தின் கூறுகளில்
உன் ஆற்றல்களை உரோஞ்சிவிடு
பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல
உன் வழிகாட்டல்களும் வாசம் வீச...
நளீம் ஹாஜியார் வளாகத்தில்
தூவப்பட்ட விதைகள் எப்போதும்
விருட்சமாக வளராமல் இருந்ததில்லையே.......
நீயும் ஆலம் போல வேலம் போல
தன்னைச் சுற்றி குளிர்ச்சியூட்டும்
விருட்சமாகிவிடு சகோதரா......
நான் தூரத்தில் இருந்து குளிர்ச்சி
காரணமாக ஒடுங்கும் ஒரு மழைத்துளி
மூலம் அதை அறிந்து கொள்கிறேன்......
என் பிரார்த்தனைகளுக்குள் உன்னையும்
செருகிக் கொள்கின்றேன்......



© siriuspoetry