...

12 views

மகளே!
அன்பு மகளே வானவில் அழகே
உலகம் காண என்னோடு வா
பயமெல்லாம் நான் போக்குவேன்
உன் கூடவே நான் இருப்பேன்-(அப்பா)

முக்கால்வாசி நீர்தானம்மா
மூச்சு முட்டும் பயம் ஏனோ
மூழ்கி எழுந்தா சுத்தமாகிடுவ
மூச்சடக்கினா முத்தெடுத்துடுவ
பயப்படாம கால் நனச்சி பாரம்மா- (அப்பா)

நெருப்பென்னும் அதிசயத்த பாரம்மா
ஒளியாக்கி பழகிடேன்னா உபயோகமம்மா
தொட்டு பாரு அப்பா கைய சூடாருக்கும்
அதுவரைக்கும் நமக்குள்ளே உயிர் இருக்கும்
கை நீட்டி கனல் வார்த்துக்கொள்ளம்மா- (அப்பா)

காற்றென்னும் மாயாவி சுற்றிருக்கான்மா
கண்மூடி உள்ளிழுத்து சிறை செய்யம்மா
போதும் போதும் விட்டுறு பொழச்சி போகட்டும்
செடி கொடி மரமெல்லாம் தழைச்சி வாழட்டும்
சுவாசத்தை ஆளுமை கொள்ளம்மா- (அப்பா)

இயற்க்கை தந்த முதல் மேடையம்மா
காலூன்றி அவள் புகழ் பாடம்மா
இறுதிவரை தாங்கி கொள்ளும்
இறந்த பின்பும் அனைத்துக்கொள்ளும்
நிலமே நிரந்தர இல்லமம்மா- (அப்பா)

அன்பு மகளே வானவில் அழகே
எல்லையில்லா வானம் உனக்கே
மேகங்களின் குளிர்ச்சி தொட்டு
மழையாய் மாறிடலாம் வா- (அப்பா)