...

1 views

காதல் கடலே…
தரையில் தானோ
விண்மீன்கள்
தவழும் அழகுக்
காட்சிகளை
கரையில் நனையும்
காலத்தில்
கடற்கரை மணலில்
கண்டுகொண்டேன்

அலைகள் தோறும்
பாடுகின்ற
வலைகள் வீசும்
வரிகளில்தான்
விரும்பி மயங்கி
மாட்டுகிறேன்
வினாவேன் விழுந்த
காரணத்தை

குதித்து மகிழும்
உணர்வுகளை
குவியல் மீன்கள்
குளியல் சொல்லும்
பதித்து நிற்க
காட்சிகளை
பார்க்கும் கண்கள்
பார்வை வெல்லும்

துள்ளித் தெறிக்கும்
நுரைகளது
வெள்ளித் திரவ
முத்துமணி
தெள்ளத் தெளிவாய்
திரண்டிருக்கும்
உள்ளத்தில் ஓவியம்
பிறந்திருக்கும்

தூரம் போகும்
பாற்கடலே
துன்பம் துடைக்கும்
துதியென்பேன்
ஈரம் ஓரம்
நடக்கையிலே
மனபாரம் துடைக்கும்
நொதியென்பேன்

கண்ணில் படாத
கடற்காற்றே
உன்னில் கலக்க
வரமுண்டா
விண்ணில் பறக்கும்
பறவையாகி
வியக்கும் அழகை
கண்டுவர

கட்டிப் பிடிக்க
ஆசையுண்டு
கட்டழகு கலை
கடலே
தொட்டுப் பிடிக்கும்
தொலைவிருந்தும்
கைக்கட்டிப் போட்ட
பிறவி நானே

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes
© aV ​✍🏾