10 views
மகளிர் தின வாழ்த்துகள்
பெண்ணெனவே இவ்வுலகில்
பிறப்பெடுத்த ஓவியமே...
இன்னல்கொடி உன்மேல் - அடி
எழுதுகிறேன் சிறு காவியமே...
"சுதந்திரத்தை அடைந்துவிட்டாய்...
சூழ்நிலையை மாற்றிவிட்டாய்...
விண்ணில் நீ பறக்கின்றாய்
விளையாட்டில் சிறக்கின்றாய்...
சாதனைகள் ஆற்றுகிறாய்" - எனச்
சாற்றிடுவோர் அறிவதில்லை..
மாசற்ற மதியழகே
மங்கை உன் இடர்களையே...
விலகும்உன் ஆடையென்று
விழியோடு உறவு கொண்டு
விடமான மனம்கொண்ட
வீண்உயிர்கள் அலையுதடி...
வெகுண்டே மனம் எரியுதடி ...
"ஆடையதில் ஒழுக்கமில்லை...
ஆண்களிடம் களங்கமில்லை...
பெண்ணிற்கே கற்புடைமை" எனப்
பேசிடுதே பேய்க்குலங்கள் ...
பித்துப் பிடித்த பைத்தியங்கள்...
கருவிற்குள் சேலைகட்ட
கச்சிதமாய் கடவுளும்தான்
கருப்பையைப் படைத்தாலும்
கயவர்கள் ஒழிவதில்லை - அவர்தம்
கள்ள மனம் அழிவதில்லை...
நிலமகளைப் பெண்ணென்பார்
நீதியையும் பெண்ணென்பார்...
நிலம்தனையே வாழவைக்கும்
நீரதையும் பெண்ணென்பார்...
உணர்வற்ற அதற்கெல்லாம்
உணவிட்டுத் துதித்திடுவார்...
உண்மையிலே பிறப்பெடுத்த
உனை மட்டும் மிதித்திடுவார்...
"கண்ணாக எண்ணுகிறோம்
காரிகையை" என்றுதினம்
கதைகதையாய்ப் பேசிடுவார்...
காதலென்றால் ஏசிடுவார்....
கலங்காதே கண்மணியே
காலம் ஒருநாள் கைகொடுக்கும்..
காற்றெங்கும் உன்பெருமை
தினம்பாடி புகழ் பெருக்கும்....
மாசில்லா வைரமடி
மணிமகளே உன்கண்ணீர்
பேசிடும்வாய் பேசட்டும்...
பிறகொரு நாள் கைத்தட்டும்...
Related Stories
10 Likes
5
Comments
10 Likes
5
Comments