...

2 views

எப்படி மறந்து போவேன் உன்னை!
கொல்லாமல் உயிரோடு
நினைவுகளில் புதைத்துச் செல்லும் இந்த காதல்தான் எவ்வளவு கொடூரமானது?

கோலெடுத்தால் ஆடும்
குரங்கினைப் போல
இத்தனிமையை ஆக்கிரமித்திடும்
இந்த காதல்தான் எவ்வளவு கொடுமையானது?

கிள்ளியெறியவும் முடியாது
கீறிடவும் ஏற்க முடியாது
மூளையை மழுங்கடிக்கும்
இந்த காதல்தான் எவ்வளவு இரக்கமற்றது?

அனல் பார்வைகளால் காதலை சமைத்து கொல்பவன் நீயாகையால்
இந்த காதல்தான் எவ்வளவு விசித்திரமானது?

இருந்தும் எப்படி மறந்து
போவேன் உன்னை?!

நெஞ்சின் சிம்மாசனத்தில்
நெருக்கமாய் இருந்த உன்னை!

நினைவின் வட்டுகளில்
நீக்கமற நிறைந்திருந்த உன்னை!

எழுத்தாணியின் கீறல்களில்
எண்ணிலடங்காமல் தளும்பிய உன்னை!

தயக்கங்களைப் பறித்து
தடைகளை உடைத்து
தன்னம்பிக்கை ஊட்டிய உன்னை!

தனித்துவமானவளென உரைத்து
நீங்கா தனிமையைப்
பரிசளித்துப் போன‌ உன்னை!

இங்கே கலைத்துப் போடப்பட்டிருக்கும்
வார்த்தைகளில்
என்னை வதைக்கும்
உனது வியாக்கியானங்களை உடைத்தெறியும் சொற்களையே
தேர்ந்தெடுக்கிறேன்
இருந்தும் ஏனோ தொக்கி நிற்கின்றன மௌனங்கள்!

பார்வைகளால் விலகலை அறிவித்து
பாடல் வரிகளில் கைக்கோர்த்து செல்லும் இந்த நேசம் தான் எவ்வளவு வியப்புக்குரியது?!
- மதிஒளி சரவணன் #மதிஒளிசரவணன்