...

11 views

கிழவியின் மரணம்

சரியாக சொன்னால் அன்றுடன்
முடிவுக்கு வந்தது அந்த கிழவன்
கிழவிக்குமான ஐம்பத்திஏழு ஆண்டு
காலம் வளர்த்திருந்த இல்லரம்..

ஆமாம் இன்று அந்த கிழவி இறந்து
விட்டாள்.பெரிதாக ஒன்றும் நோய்
ஏதுமில்லாமல் வயதில்
முதி்ர்ச்சியால் வந்த இறப்பு..

ஐஸ்பெட்டிக்குள் இருந்த அவளை
சுற்றி நின்று அழுதிட இரண்டு
மகன்,இரண்டு மகள்,மருமகன்
மருமகள் பேரப்பிள்ளைகள் என்று
நிறைவான வாழ்க்கைதான்..

தூரமாய் அமர்ந்தபடி அந்த ஐஸ்
பெட்டியை வைத்தகண் வாங்காமல்
பார்த்துக்கொண்டிருந்தான் கிழவன்..

கண்களில் ஒரு சொட்டு நீர்கூட
வருவதாக இல்லை.சில அதிகபடி
சோகங்கள் கண்ணீரில் வருவதில்லையே..

லேசாக அவன் கண்கள் மூடிட அந்த
ஐம்பத்தேழு ஆண்டுகள் பின்னே
சென்று விரிந்தது அவனுக்கு..

பெரிதாக காதலென்று ஏதுமில்லை,
இன்னும் தெளிவாக கூறுவதென்றால்
அந்த கிழவியும் கிழவனும் முதன்முறை
சந்தித்ததே அவர்கள் திருமணத்தில்தான்

இளம்வயதில் சற்று முறுக்கேறிய
தேகம்தான் அந்த கிழவனுக்கு.அதை
ரசிக்காமல் இல்லை அந்த கிழவியும்..

பொழுதுபோக்கென்று பெரிதாய்
ஏதுமில்லா அந்த காலத்தில் ஒரேயொரு
பொழுதுபோக்கே..அதன் விளைவாய்
அடுத்தடுத்து நான்கு பிள்ளைகள்..

எழுபதுகளின் கிராமபுரம் என்றானதால்
ஆணாதிக்கம் சற்று தூக்கலாகவே
இருந்திருக்கும்.அதற்கு அந்த
கிழவனும் விதிவிலக்கல்ல..

குடிப்பதும்..குடித்துவிட்டு அடிப்பதும்
இயல்பான நிகழ்வாகி அதற்கு
அவளும் பழகிக்கொண்டாள்..

அடிக்கிற கை தான் அணைக்கும்
என்ற பழமொழியெல்லாம் அந்த
காலகட்டத்தின் கண்டெடுக்கபட்டது
போல..இவர்களும் அப்படியே..

இருந்தும் ஒரு முறை வன்முறை
வரம்புமீறி ஆஸ்பத்திரி அவளை
அழைத்துக்கொள்ளும் நிலை...

ஒருமாத ஆஸ்பத்திரி வாசம்
முடித்து அவள் வந்திறங்கிய
வீட்டில் அவ்வளவு மாற்றம்..

அன்று தொடங்கி இன்று அவள்
ஐஸ்பெட்டிக்குள் கிடக்கும்வரை
அவளை அவன் ஒருமுறைக்கூட
தொடவில்லை அடிப்பதற்காய்..

சபையில் அமர்ந்து எடுக்கும்
முடிவனைத்தும் அவன் வாய்வழி
வர,அதற்காக வார்த்தைகள்
அனைத்தும் அவளுடையதானது..

எங்கும் எதிலும் அவனை அவளும்
அவளை அவனும் விட்டுக்கொடுத்து
பேசியதில்லை.இதனை விளையாட்டாக
பிள்ளைகள் கேளி செய்தும்
அவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை..

வாழ்க்கை ஓட்டத்தி்ல் ஓடியபடி
நான்கு பிள்ளைகளின் திருமணமும்
முடிந்தாகிவிட்டது..

குடும்பசண்டைகளுக்கு விதிவிலக்காக
இல்லாமல் இவர்கள் குடும்பத்திலும்
வந்துவந்து சென்றது.சண்டையற்ற
குடும்பங்கள் இங்கேது..

மெல்ல இருவரையும் முதுமை வந்து
முத்தம் தர அந்த கம்பீரம் சற்று
தளர்ந்து பக்குவப்பட்டிருந்தான்
அந்த கிழவன்..

முதுமையை காரணமாய் காட்டி
இவனை"யாரும் ஏய்திட நினைத்தால்
இவளது இன்னொரு முகத்தை அனைவரும் கண்டிருந்தனர்..

அமைதியாய் இரு என்று சிரித்தபடி
அந்த கிழவன் சொன்னால் அவனையும்
சேர்த்து முறைத்திடுவாள்..

அவள் மட்டும் தானே அவனுடைய
ஆண்மை கோபம் வீரம் என்று
அனைத்தையும் அறிந்தவள்..

அப்படிப்பட்டவள் எப்படி
விட்டுக்கொடுப்பாள்
அவளுடைய இணையை..

இறுதியாக உயிர் பிரியும்
ஒருவாரம் முன்னர் அந்த
கிழவி படுத்தபடுக்கையானாள்..

மருத்துவரிடம் அழைத்து சென்றதும்
அவங்களுக்கு புடிச்சதெல்லாம்
வாங்கி கொடுத்திடுக்க என்ற
ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்

மறுநாள் அதிகாலையில் எழுந்து
சென்று ஆட்டிறைச்சி வாங்கி
வந்து சமைத்திருந்தான்..இவன்
வைக்கும் ஆட்டிறைச்சி என்றால்
அந்த கிழவிக்கு கொள்ளைபிரியம்..

பெரும்பாலும் அவன் சமைக்க
மாட்டான்..என்றாவது அவளுடன்
சண்டையெனில் அவளை
சமாதானப்படுத்த அவன் எடுக்கும்
ஒரு தந்திரம் அது..

அவன் சமைப்பான் என்பதே
தெரியாத அவனுடைய புதிய
மருமகளுக்கு இது ஒரு அதிசயம்..


இன்று:

என்னப்பா..நேரமாச்சுல..பாடி
எடுக்கலாம்..பாக்ஸ தொரங்க
என்ற குரல் கேட்க கண்களை
திறந்தான் அந்த கிழவன்..

ஐஸ் பெட்டி திறக்கப்பட்ட நொடி
ஓடிச்சென்று விழுத்தான் அவள் மீது..
முத்தமழை பொழிந்தபடி ஓவென
அழத்தொடங்கினான் அந்த கிழவன்..

மொத்த கூட்டமும் அமைதியானது..
அழக்கூட உண்மையில் அந்த கிழவனுக்கு
சுத்தமாக தெம்பில்லை..

அந்த எண்பதை தாண்டிய கிழவன்
அழுகை அனைவருடைய மனதையும்
சற்று கணமாக்கியது..

ஐம்பத்தேழு ஆண்டு
நிகழ்வுகள்
நினைவுகளாகிட..
மெல்ல வெளியேறினாள்
அந்த கிழவி..

அந்த கிழவனின் மொத்த வாழ்வை
தன்னுள் அள்ளிக்கொண்டு..

© பினோய் பிரசாத்