...

5 views

மகாகவி பாரதியார் வழியில் பயணிப்போம்.
எண்ணிய முடிதல் வேண்டும்
எங்கும் தமிழே ஒலிக்க வேண்டும்!

சத்தம் இல்லாத சபைகள் வேண்டும்
சாதி இல்லாத மனிதம் வேண்டும்!

ஆயுதம் இல்லாத எதிர்காலம் வேண்டும்
அரசியல் வாதிகள் இல்லாத அரசு வேண்டும்!

உயிரை வதைக்காத விலங்குகள் வேண்டும்
உலகுக்கெல்லாம் ஒரே கடவுள் வேண்டும்!

உயிரில் கலந்த நேசம் வேண்டும்
உள்ளத்தில் இருந்து பாசம் வேண்டும்!

சோகம் சேர்க்காத விழிகள் வேண்டும்
சோதனை இல்லாத வாழ்க்கை வேண்டும்!

தலைக்குனியாத தைரியம் வேண்டும்
தாய்க்கெல்லாம் கோவில் வேண்டும்!

வம்பு செய்யாத மோகம் வேண்டும்
வஞ்சனை இல்லாத மேகம் வேண்டும்!

வயது முதிராத பூக்கள் வேண்டும்
வறுமைகள் இல்லாத மக்கள் வேண்டும்!

பறவைக்கெல்லாம் ஒருமொழி வேண்டும்
பாரெங்கும் தமிழே வேண்டும்!

சொர்க்கலோகம் பூமியில் வேண்டும்
சொற்கள் எல்லாம் தமிழாய் வேண்டும்!

எண்ணங்கள் எல்லாம் வண்ணங்களாக வேண்டும்
எருதுகள் எல்லாம் பேசிட வேண்டும்!

உலகை திருத்தும் கவிதை வேண்டும்
உண்மை உரைக்கும் ஞானி வேண்டும்!

கடவுளை அடையும் ஞானம் வேண்டும்
காமத்தை வீழ்த்தும் தந்திரம் வேண்டும்!

அறிவை போதிக்கும் பாடல் வேண்டும்
ஆசான்கள் எல்லாம் மீண்டும் வேண்டும்!

விலகி ஓடாத நட்பு வேண்டும்
விட்டு போகாத செல்வம் வேண்டும்!

விழுந்து விடாத வீரம் வேண்டும்
கொலைகள் இல்லாத வெற்றிகள் வேண்டும்!

ராஜராஜனின் மேலாண்மை வேண்டும்
ராசேந்திர சோழனின் கப்பல்படை வேண்டும்!

வள்ளுவனின் பாடசாலை வேண்டும்
வாசகி வாழ்ந்த குடிசை வேண்டும்!

மீண்டுமொரு பாரதி வேண்டும்
மீண்டு எழும் நம்பிக்கை வேண்டும்!

மன்மதன் தொடுத்து அம்பு வேண்டும்
மாதவி போல் மங்கை வேண்டும்!

உழைத்து வாழும் உறுதி வேண்டும்
உரக்க பேசும் தைரியம் வேண்டும்!

பகிர்ந்துக்கொள்ளும் பாசம் வேண்டும்
பட்டினி இல்லாத மானிடம் வேண்டும்!

ஆமை போன்ற துணிவு வேண்டும்
அஞ்சி விழாத ஆண்மை வேண்டும்!

பசுவை போன்ற பணிவு வேண்டும்
பாற்கடலுக்கும் அமைதி வேண்டும்!

எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
எங்கும் இசைத்தமிழ் ஒலிக்க வேண்டும்!

பொய் இல்லாத முகங்கள் வேண்டும்
பொங்கி வழியாத அலைகள் வேண்டும்!

கடவுளை போல் கருணை வேண்டும்
கூடி வாழும் குடும்பம் வேண்டும்!

அன்பால் நிறைந்த உலகம் வேண்டும்
இத்தனையும் நடக்க வேண்டும்
அத்தனையையும் அருள வேண்டும்
என்றும் நலமுடனே வாழவேண்டும்.
-சங்கத்தமிழன்