...

11 views

ஏழை விட்டு இளவரசி
தன் பிஞ்சு பாதங்களை  இரும்புக் கட்டிலில் அடித்து அடித்து "டம் டம்" என்று கொலுசொலியோடு ஒலியெழுப்ப, அவ்வொலியை கேட்டு அம்மழலை மலர்ந்து சிரித்து கொண்டிருந்தது. வேலையை முடித்து வீட்டுக்கு வந்த தமிழ் , அப்போது தான் உள்ளே நுழைய, மகளின் விளையாட்டை அறியாது, அவள் பாதங்களைக் கட்டிலில் அடிப்பதைக் கண்டு' வலிக்கும் ' என்று பதறி போய் காலைப் பிடித்துக் கொண்டான்.

"என்னடா குட்டி இப்படி பண்றீங்க கால் வலிக்க போகுது" அந்த பிஞ்சு விரலை நிவி விட்டப்படி பாதங்களில் முத்தம் வைத்தான். கணவனின் அரவம் கேட்டு அடுப்பங்கறையில் இருந்து வந்தாள் வாசுகி. "எப்போ வந்தீங்க?" என்று கேட்டு அவனருகில் வந்து தோளைத் தொட,  அதை தட்டிவிட்டவன், "உனக்கு காது கேட்குதா இல்லையா? இல்ல அறிவுனு ஒன்னு இருக்கா இல்லையா?" எனக் கேட்க , அவளும் புரியாமல் விழித்தாள்.

"பாப்பா கால வச்சி கட்டில் தட்டுறாளே உனக்கு அது கேக்கலையா? அந்த பிஞ்சு காலு வலிக்காது, என் வேட்டிய ரெண்டு சுருட்டி அவ காலுக்கு அடியில் வச்சிருக்கலாம்ல. எவ்வளவு நேரம் தான் காலை வச்சி தட்டிட்டி இருந்தாளோ  ! அவளுக்கு வலிக்காதா? அவளால வலிக்குதுனு சொல்லவா முடியும் நீதானடி வந்து பார்க்கனும்" மகளின் தந்தையாய் மாறியவன் மனைவியின் கணவன் என்பதை மறந்தான்.

"கொஞ்சம் கீழ பார்த்துட்டு பேசணும்"என்றிட அவனும் கீழே பார்த்தான். அவனது  வேட்டி இரண்டு கிடந்தன. நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் வச்சிட்டேன். கீழ கீழ தள்ளிவிடறா நான் என்ன பண்றது?  நீங்க தான் கால் வலிக்குதுனு பயப்படுறீங்க, ஆனா அவ விளையாடறா ! பாருங்க வலிச்சா  அழ மாட்டாளா? அவ விளையாடுறாங்க" என்றதும் மகளை பார்க்க, பொக்கை வாயை வைத்து கள்ளத்தனமாகச்  சிரித்தாள். அதை ரசித்தவன் மனைவி தன்னை முறைப்பதைப் பின்னுணர்ந்து. " ஈஈ ஸாரி வாசு ! பிள்ளைக்கு வலிக்குமோனு பதறிட்டேன் " என்று வழிந்தான்.

"அவ்வளவு அக்கறை இருக்கிறவரு மகளுக்கு மெத்தை வாங்கி போடுறது" என்றிட, "மெத்தையா???" என யோசித்தவன், "கடன் வாங்கியாவது வாங்கிடுறேன்" என்றிட அதற்கும் முறைத்தவள், "ஏன்யா நான் மாசமா இருக்கும் போது மெத்தை வாங்கல இப்ப உன் பொண்ணு இரும்பு கட்டில இடிச்சிகிறானு  கடன் வாங்கி மெத்தை வாங்குவீயா?  இதுவே நான் சுகப்பிரசவம்ன்னால தப்பிச்ச ஆப்பிரேஷன்னா கடன் வாங்கிருப்பீயா? " பொய் கோபம் கொள்ள,

"என்னடி நீன்னு நீ மாசமா இருக்கும் போது மெத்தை வாங்காம இருக்க காரணம் காசை மிச்ச படுத்தி, உனக்கு ஆப்பிரேஷன் ஆனா கூட வேணுன்றத்துக்கு தான்.. ஆனா நீ சுகப்பிரசவத்துல  என் பொண்ண பெத்துக் கொடுத்து காசை மிச்சம் பண்ணிட்ட அந்தக் காசுல என் பொண்ணுக்கு மெத்தை வாங்கி போடுறேன். இதுல என்ன  இருக்கு? நீ என் வூட்டு ராணினா, இது இளவரசி டி இந்த ஏழையோட இளவரசிடி இனி அவளுக்கு தானே எல்லாம்" என்றவன் கூற்றில் உதட்டை சுழிக்க மனைவியை தன்னோடு சேர்த்து மகளுடன் கொஞ்சி சமாதானம் செய்தான்.


© All Rights Reserved