...

13 views

முருகன் அடிமை


கந்தசஷ்டி... சூரசம்ஹாரம்... கொண்டாடப்படுவது ஏன்?


முருகப்பெருமானை வழிபட சிறந்த நாள் என்றால் அது கந்தசஷ்டி நாளாகும். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பார் என்பது நம்பிக்கை.

மும்மூர்த்திகளின் அம்சம் :

முருகப்பெருமான் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர்.

ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தைக்கே குருவாக இருந்து உபதேசித்தவர். அதே மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை, சிறையில் அடைத்தவர்.

சூரனை சம்ஹாரம் செய்து, பின் இந்திரனின் மகளை மணந்து கொண்டவர்.

இவ்வாறு முருகன், மும்மூர்த்திகளோடும் தொடர்புடையவராக இருக்கிறார். இதனை உணர்த்தும் விதமாக திருச்செந்தூரில் முருகப்பெருமான், மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

கந்தசஷ்டி கொண்டாடப்படுவது ஏன்?

சூரபத்மன் வதம் தவிர்த்து, கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு வேறு இரண்டு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல் காரணம் :

ஒரு சமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டுமென்பதற்காக யாகம் ஒன்று நடத்தினர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை துவங்கி ஆறு நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன.

அந்த வித்துக்களை ஆறாம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

இரண்டாவது காரணம் :

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் தேவர்கள், அசுரர்களை எதிர்க்கும் வல்லமை பெறவும், அவரது அருள் வேண்டியும் ஐப்பசி மாத வளர்பிறையிலிருந்து ஆறு நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார்.

இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

சூரசம்ஹாரம் ஏன் கொண்டாடுகிறோம்?

காசியப்ப முனிவர், மாயை என்ற தம்பதியருக்கு பிறந்தவன் சூரபத்மன். இவர் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.

இந்த வரத்தால் தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான் சூரபத்மன். இதை தடுக்க அவதாரம் எடுத்த முருகன், பார்வதியிடம் வேலை பெற்று, சூரபத்மனை போரில் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய கோவில்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.