...

5 views

நிறமாய் வந்தவளே..
நிறமற்ற வாழ்விலே..
நிறத்தின் தன்மையையும்
நிறத்தின் அழகையும்
நின்று பறைசாற்றும்
நிகரில்லா காரிகைநீயே..


நிறமுள்ள வானவில்லே..
நிமிடமும் மறையாது
நின்றாயே எனக்காக
நிலவின் பிரதிபலிப்பாய்..
நிலவின் நிலவாய்..


ஒளி குன்றிய நாட்களிலே
ஒளியாய் வந்த ஒருத்தியே..
ஒளியின் ஒளித்தன்மை
ஒளிந்திருக்கும் போதினிலும்
ஒரு பார்வை பார்த்தாளே..


ஒரு மங்காத ஜோதிபோல்
ஒளியின் ஒளியாய் எனக்கு
ஒளி ஏற்றியவள்.. என்னுள்
ஒருசேர கலந்தவளே..
ஒன்றாக பிறந்தவளே..


எண்ணமும் வண்ணமும்
மாறினாலும் மாறாத
மதியதன் பொலிவாய்
நிறைவாய் நின்றவளே..
நிறைவின் நிறைவாய்..


மதியிலும் மாசு உண்டு
மனத்திலும் மானத்திலும்
மேனியிலும் மேன்மையிலும்
மாசறியாத மாணிக்க
நற்சுடராய் நங்கையவளே..


நின்றவளே என்மனதில்
சென்றவளே கண்ணசைத்து..
ஓரக்கண் பார்வையதில்
ஓராயிரம் காவியங்கள்
ஒருசேர படைக்கலாம்..


பூம்பதுமை உனைக்கண்டு
பூவிதழ்கள் தான்கொண்டு
பூத்திருக்கும் பூவே உனக்காக
பூக்களும் புன்னகை செய்து
பூத்திருக்கும் உன்வரவில்..


ஓங்கி அடிக்கும் காற்றும்
ஒருநொடியில் தென்றலாய்
தெம்மாங்கு தான்பாடும்..
தென்றலின் இளந்தென்றலாய்
நீ தென்படும் போதெல்லாம்..


காய்களும் தான் கனிந்து
கணக்கென கவர்ந்திழுக்கும்
காரிகைநீ சோலையதில்
கனிக்காக காண்கையிலே..
உன்இதழின் ருசியறிய..


© CG Kumaran

Related Stories