...

2 views

தமிழ்மொழி..

அன்னை ஊட்டி வளர்த்த பால் - அது
அருந்தமிழ்ப் பால்!
இப்பால் உண்டதற்கு அப்பால்,
எப்பால் சுவைக்கும்? சொல் தமிழா!

முப்பால் கொண்ட தமிழுக்கு
ஒப்பாகுமோ முக்கனியின் சுவைதான்
தப்பாமல் கூறுவேன் என்னாளும்
மூப்பில்லா மொழி தமிழ்மொழியென்று!

மூன்று என உரைத்தாலே அது தமிழ்!
மூவேந்தரும் அறிந்த மொழி தமிழ்மொழி!!
மூதோர் ஆக்கிய முதல் மொழி தமிழ்மொழி!!!

அன்னைத் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ்மொழி!
ஆன்றோரும், சான்றோரும் போற்றி வளர்த்த மொழி தமிழ்மொழி!
இனிமை, எளிமை, தொன்மை வாய்ந்த மொழி தமிழ்மொழி!
ஈசனடியார்கள் இறைவனைப் பாடி வணங்கிய மொழி தமிழ்மொழி!
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த மொழி தமிழ்மொழி!
ஊரார் அனைவரும் உறவினர் என உரைத்த மொழி தமிழ்மொழி!
எதுகையும், மோனையும், முத்தமிழ்ச் சங்கமும் கண்ட மொழி தமிழ்மொழி!
ஏடும், சுவடும், கல்வெட்டு பலவும் பறைசாற்றும் மொழி தமிழ்மொழி!
ஐம்பெரும் காப்பியமோடு, தொல்காப்பியமும் படைத்த மொழி தமிழ்மொழி!
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என உணர்த்திய மொழி தமிழ்மொழி!
ஓடும் நதிபோல் தங்கு தடையின்றி பேசப்படும் மொழி தமிழ்மொழி!
ஔவையின் பொன்மொழி உலகிற்கு வழங்கிய மொழி தமிழ்மொழி!
அஃதே நம்மொழி! செம்மொழி!! தமிழ்மொழி!!!

மா.ஷங்கர்.

© All Rights Reserved