...

2 views

தந்துவிடு! அவனுக்கோர் கருவறையை!
கால் கட்டுப் போட்டால்
சரியாகிடும் என்று சொல்லி
கடமையை நிறைவேற்றித்
தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்
பெற்றோர்.....

கால் கட்டுப் போட்டும்
கைக் கட்டுப் போட்டும்
கண்டித்தும் கரிசனையாய்க் கூறியும்
மாறாமல் அவன்!

இங்கேயும் சொல்ல முடியாமல்
அங்கேயும் சொல்ல முடியாமல்
எங்கேயும் செல்ல முடியாமல்
எதுவும் செய்யவும் முடியாமல்

காலம் ஓட ஓட
அப்பொழுது விடியும்
இப்பொழுது விடியும்
என்று காத்திருந்து
எப்பொழுதும் விடியாது
என்று தெரிந்தும்
தான் பிரசவித்த
ஒரு உயிருக்காக மட்டுமே
உயிர் வைத்திருக்கும்
பெண்....

தன் அப்பாவுக்காக
தன் கணவனுக்காக
தன் பிள்ளைக்காக
என மாறிக் கொண்டே
தன் மனதைப் புதைத்து விட்டும்
மகிழ்ந்து
இருப்பவள் அவள்!

ஆனால் எத்தனை
காலங்கள்
உருண்டோடினாலும்
தன்னை மாற்றிக் கொள்ளாத
ஆண்!

இயற்கையே முடிந்தால்
உயிரைச் சுமக்கும்
கருவறையை ஆணுக்குத் தா
அப்பொழுதேனும் உணர்ந்து

தான் என்ற அகந்தையை
விட்டொழித்து
உணரட்டும்

உயிர் சுமப்பவளின்
வலியை.....
உணர்வு சுமப்பவளின் அன்பை....

அவன் பிறழ்வால் பாதிக்கப்ட்ட
அவளை அவள் பிள்ளைகளின் வலியை
கண்ணீரை வருத்தத்தை....

இயற்கையே
தந்து விடு !
இன்றே
அவனுக்கோர் கருவறையை!

அப்படியேனும் தணியட்டும் அவள் ஆதங்கம்!
அப்பொழுதேனும் தணியட்டும் அவன் ஆதிக்கம்!
#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல் #கவிதை