...

3 views

இவள் ஒரு செங்காந்தள் பூ
மாலை பொழுதின்
வண்டுகள் மொய்க்க
மலர்ந்து காத்திருக்கும் பீர்க்கம் பூ

தங்கமுலாம் பூசிய
தங்கரதம் போல் குவிந்திருக்கும்
தாமரை பூ

அந்தி சாய்ந்தாலே
அதிகார கட்டிலில்
ஆட்சி செய்யும் ஆம்பல் பூ

இரவை கொண்டாட
இடமளித்து மனம் கவர்ந்து
இழுக்கும் செர்ரி பூ

காற்றும் காதல் செய்யும்
கருங்கூந்தலில் மணக்கும்
காட்டுமல்லி பூ

பேரெழில் தோட்டத்தில்
பேரொளி விழிக்குள்
பேரழகு நீல பூ

இன்னும் வெடிக்காத
இதழ்களை நெருங்கினால்
இன்பத்தேன் அளிக்கும் முருக்கம் பூ

மலர் சோலையில்
மணம் வீசியழைக்கும் - பவள
மல்லி பூ

தேகம் எங்கும்
தேடலை தந்து
தோள்களில் கமழ்ந்து வீசும் சந்தன பூ

வளைந்து நெளிந்து
வளர்ந்து குறுகி
வருடும் நாணல் பூ

சிறத்தையில் மலர்ந்த
சித்திரம் வாய் திறந்து
சிரிக்கும் இவளொரு மகிழம் பூ

வளம் நிறைந்த தமிழின்
வான் புகழ் கொண்டு
வளர்க்கப்படும் இவளொரு செங்காந்தள் பூ.
- சங்கத்தமிழன்