...

7 views

முதன்முறை அணிந்த புடவை
*முதல்முறை அணிந்த புடவை*


ஆம்,அவள் அன்றுதான்
முதல்முறை புடவை
அணிகின்றாள்..

முதல்முறை என்றாலே
அனைவரும் அறிந்தது போல
அம்மாவின் புடவைதான்..

கல்லூரியில் ஏதோவொரு
கலைநிகழ்ச்சியாம்,அதற்கான
கட்டாய உடையாம் புடவை..

கடைசியாக அவளது சடங்கில்
ஒருமுறை அணிந்தது தான்,அது
பள்ளிப்பருவம் விவரம் அறியாதது..

அனைத்தும் அறிந்திருக்கும்
இந்த பதினெட்டில் அணியும்
இதுவே மனதால் முதல்முறை..

முதல்நாள் உறங்கும் முன் சுலபமாக
புடவை அணியும் காணொளி பல
கண்டபடி அப்படியே உறங்கிவிட்டாள்..

கைப்பேசியில் அலாரம் அடிக்கும்
முன்னரே அவள் விழித்திட அந்த
அலாரமும் ஆச்சர்யப்பட்டது..

குளியலறையுடன் ஏதோ சண்டை
என்பது போல போனதும் வந்ததும்
தெரியவில்லை.இதுவல்ல மற்றநாளில்..

முதல் அரைமணிநேரம் முதல்நாள் கண்ட காணொளி கைக்கொடுக்குமா என
அவள் முயற்ச்சி கொண்டாள்..

தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டிய
நேரம் வந்ததால் வழிந்தபடியே
அம்மாவிடம் சரணடைந்தாள்..

இவள் வருவாள் என்பதை முன்னரே
கணித்திருந்த அம்மா அவளுடைய
காலை வேலைகளை முடித்திருத்தாள்..

அம்மாவின் கைவண்ணம் அடுத்த
ஐந்து நிமிடத்தில் இவளை ஒரு
தேவதையாய் மாற்றியிருந்தது..

கண்ணாடியில் விதவிதமாய்
அவளை அவளே நிற்கவைத்து
பார்த்தபடி கொஞ்சம் நேரம் கடந்தது..

கொஞ்சம் திருப்தி குறைவால் எதிர்
வீட்டு அக்காவை அழைத்தாள்.அவள்
அம்மா முறைப்பதை காணாதவாறு..

அக்காவின் கைவண்ணமும் சேர்ந்து
இப்போது அவள் மனநிறைவடைந்து
முகஅழகு வேலையில் இறங்கினாள்..

பேருந்து பயணம் கூடாதென முடிவில்
தன் அப்பாவை தற்காலிக ஓட்டுனர்
ஆக்கி விடைபெற்றாள் வீட்டைவிட்டு..

அழகான தேவதை போல் இருக்கிறாய் என்பதை கூறினால் மிதந்திடுவாள் என்று அறிந்து அமைதியாய் அனுப்பினாள் அம்மா..

சாலையில் அனைவரும் அவரவர்
வேலைக்காய் பறந்திட தன்னையே
பார்பதாய் தோண்றியது அவளுக்கு..

வெட்கமென்ற ஒன்றை முதன்முறை
தனக்குள் அவள் உணர்ந்தபடி ஒருவழியாக கல்லூரி வந்தடைந்தாள்..

இவளை போலவே இவளுடைய குட்டி பட்டாளத்தின் தேவதைகளும் இவள்
மனநிலையிலே அங்கிருந்தனர்..

உத்தேசமாக கூட்டிப்பார்த்தாலும் இவள்
புடவையில் குறைந்தது இருபது ஊக்கு
இருந்திடும்,கேட்டால் பாதுகாப்பாம்..

இடை தொடங்கி மற்ற யாவிலும் உடை விலகாதிருக்கிறதா என்பது அடிக்கடி பார்த்தது ஒரு திகில் அனுபவமானது..

எப்பொழுதும் இல்லாமல் நடையில்
சற்று வேகம் குறைத்து,வெட்கம்
கூட்டியபடி நடந்திருந்தாள்..

போகிறபோக்கில் இவளை பார்த்திடும்
ஆண் நண்பர்கள் எல்லாம் சற்று நின்று
பார்த்தது ஏதோ செய்ததிவளை..

கண்டிப்பான சம்பிரதாயமான செஃப்பி
எடுக்கும் படலம் தொடங்கி கைபேசி
நிறைந்திட புகைபடம் ஏறியது..

இருதியாக அவனும் வந்தான்,
வைத்தகண் வாங்காமல்
இவளை பார்த்திட
அந்நாளுக்கான பலன் கிடைக்கப்பெற்றாள்..

இப்படியாக முடிந்தது
அவளது முதல் புடவை அனுபவம்..

© பினோய் பிரசாத்