...

10 views

சுவருக்குள் ஒரு வாழ்க்கை.
வலி

மௌனமாய் இருக்கிறது.
கடலின் அடர்த்தியோடு
படர்ந்து நிலவுகிறது.

சுகங்களை அழித்து
பாறையாய் கனக்கிறது.

வலியின் உள்ளே ஒரு
தீவை உணர்கிறேன்.

தீவில் எங்கும்
நிற்காத எரிச்சல் மிகுந்த
அலைகள் தனியே
கரையை அரிக்கிறது.

வலி மரணத்தின் கண்கள்.
அதன் நோக்குதலில்
காற்று சாம்பலாகிறது.

மூச்சினை ஒடிக்கும்
கரங்களில் நான்
முழுமையாக இருக்கிறேன்.

என்னை நெகிழ்த்தி
சாபங்களில் திணிக்கிறது.
என் உலகத்தில்
சூறாவளியாய் பயணிக்கிறது.
வலி ஏதோ சொல்கிறது.

அதன் முள் நாக்குகள்
என் பெயரை
உன் தடத்தில் நிறுத்துகிறது.

நீ கடந்து போகிறாய்.



© sparisan