...

3 views

மணவிழா வாழ்த்துகள் நட்பே...
மணவிழா வாழ்த்துகள் நட்பே...💐
( முன்கூட்டிய வாழ்த்து)
வாழ்க நிறைவுடன்
நிறைய அன்புடனும் இருவரும்....

இனிமேல் உனக்கென பொறுப்புகள் கூடும்....

எதுவாயினும் உனக்கான சுதந்திரத்தை எவருக்காகவும் விட்டுத் தராதே....

முடிந்தவரை உனக்கென ஒரு வேலைக்குச் சென்று உன்னை நீயே அடையாளப்படுத்திக் கொள்! இச்சமூகத்தில்!

உன் அறிவும் தெளிவும் பொருளாதாரச் சுதந்திரமுமே
உனக்கு எப்போதும் பக்க பலமாக அமையும் என்பதை எப்போதும் மறவாதே!

மிக முக்கியமாக உன்னுள் இருக்கும் இந்தக் கலகலப்புச் சிரிப்பையும் கவலை இல்லா முகத்தையும் உருக்குலைக்கும் விதமாக எது நடந்தாலும் அதைக் கண்டு கொள்ளாதே!

எப்போதும் நீ நீயாகவே இரு!
சிறிது நேரமேனும் உனக்காக ஒதுக்கிக் கொள் ! சிரித்து மகிழ்! சிந்தனை செய்! சிறாராகிப் போ! அந்த சிற்றெறும்போடு விளையாடு! இப்படி உனக்கு எது பிடித்ததோ அதைச் செய்!

கலியாணம் என்பது வாழ்க்கையின் அடுத்த கட்டமே தவிர உன்னைத் தடுத்து நிறுத்தும் கடிவாளமல்ல!

உன் அனைத்து உறவுகளையும் அன்பால் உபசரித்து அறவழியில் பொருளீட்டி ஆனந்தமாக வாழ்!

உன் இணையேற்பு விழாவில் நான் இல்லாமல் இருந்தாலும் என் இதயம் முழுவதும் நீ தான் நிறைந்திருப்பாய்!

உடுக்கை இழந்தவன் கை போல என் இடுக்கண் களைந்த நட்பு நீ!

அவ்வப்போது
எத்தனையோ உறவுகள் வந்து போனதுண்டு ஆனால் நீ எப்போதும் என்னுடன் நின்றவள் நிற்பவள் நிலைத்தவள் என்னை மட்டுமே நினைப்பவள்

எனக்கு ஒரே நட்பு நீ தான் என்று எப்போதும் சொல்பவள் நீ! நீ தரும் அன்புக்கு எல்லாம் நான் தகுதியானவள் இல்லை தான்... நீ தரும் கடலளவு கைம்மாறு கருதா அன்புக்கு கடுகளவு தந்தேனா என்று எண்ணிப் பார்த்தால் அது இல்லை தான்!

என் கல்லூரி வாழ்க்கைக்கு அடித்தளமிட்டவள்.... இன்று நான் கொண்டாடும் அத்தனை தமிழ் நேசமும் உன்னால் கிடைத்தது எனக்கு!

நீ எனக்கு நட்பை மட்டுமல்ல
நல்ல பாசமானதொரு வீட்டையும் தந்துள்ளாய்

அம்மா போலவே பார்த்துக் கொள்ளும் அம்மாவையும்
அதீதமாக அன்பு சொல்லும் ஆத்தாவையும் ( பாட்டி) சகோகதர உறவையும் தந்தவள்...
அப்பா என்றால் கலகலப்பும் களிப்பும் என்று அறிந்து கொண்டது அங்கு தான்....
இப்படி உன் வீட்டையும் என் வீடாக மாற்றியவள் நீ!

இந்த இணைய உலகத்தில்
பல நட்புகள் அன்புகள் என்னைச் சுற்றிலும் இருந்தாலும்
காலம் நேரம் வேலை உறவுகள் இவை எல்லாவற்றையும் கடந்து அனுதினமும் அலைபேசியில்
என்னோடு இணைபவள் நீ!

பல நேரங்களில் என் உயிர் நிலைப்பதெல்லாம் உன் அழைப்பில் தான்...



இவ்வுலகமே வேண்டும் என்பவள் நான் 😅
இருப்பதில் மகிழ்ச்சி அடை என்பவள் நீ....

அத்தனைக்கும் ஆசைப்படுபவள் நான்.....

அப்பாவின் அன்பு ஒன்றே போதும் என்பவள் நீ....

இப்படி எத்தனையோ கருத்து வேறுபாடுகள் நமக்குள் இருந்தாலும்
நீ காட்டிய அன்பில் வேறுபாடு இருந்ததே இல்லை உனக்கு பிடித்ததைச் செய் என்று சொல்லி முடிப்பவள் நீ!

முடிவில்லா முதல் அன்பு செய்பவள் நீ......

மறுபடியும் வாழ்த்துகிறேன்

மூத்தோர் வாழ்த்தி
அட்சதை போட
முச்சூடும் மங்கள வாழ்த்திசைக்க
பெற்றோர் மகிழ

இரு மனம் இணையும்
திருமண விழா வாழ்த்துகள்...🖤

இறுதியாக ஒன்றே ஒன்று ....
வந்து விடுவாய் என்று தெரிந்தும் சொல்லாமல் இருக்க முடியவில்லை

வாழ்த்துகள்....😊

வந்து விடு
எத்தனை முறை போனாலும்
வந்து விடு!

கால வெள்ளத்தில் கரையாத உறவுண்டா என்ன?
அப்படியே கரைந்து போனாலும் கூட என்னுள் உறைந்து போன உன் நினைவை எண்ணி எண்ணி உவகை கொள்வேன்!

நினைவைத் தவிர வேறேது
பற்றுக்கோல் !
இவள் உயிர் வாழ!😌

_- தமிழ் நிழல் ✍🏾

#friendsforever #நட்பு #தமிழ்நிழல் #poetry #marriage #திருமணம் #Congratulations
@tamilnizhal2512